அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்திருந்தார்.
அதன்படி, இலங்கை பொருட்கள் மீது 44 வீதம் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்தார்.
சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 வீதம் கூடுதல் வரியும் வியட்நாமுக்கு 46 வீதம் கூடுதல் வரியும் விதிக்கப்படும் என அறிவித்ததோடு, அதேபோன்று பல்வேறு நாடுகளுக்கும் வரிவிதிப்பை ட்ரம்ப் வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து சர்வதேச பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.
எலோன் மஸ்க் உள்ளிட்ட உலகின் முதல் 500 பணக்காரர்கள் கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக 208 பில்லியன் டொலர்களை இழந்தனர்.
இதற்கிடையே ட்ரம்ப் வரிவிதிப்புக்கு எதிராக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
ட்ரம்ப் தொடங்கியுள்ள இந்த வர்த்தக போரால் வாரத்தின் தொடக்க நாளான இன்று (07) சர்வதேச பங்குச்சந்தைகளில் கடுமையான தாக்கம் ஏற்படும் என பங்குச்சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
முன்னதாக 1987ஆம் ஆண்டு, அக்டோபர் 19ஆம் திகதி உலகளவில் வாரத்தின் தொடக்கத்தில் பங்குச்சந்தைகள் சரிவால் உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்பட்டது.
இது கறுப்புத் திங்கள் (Black Monday) என குறிப்பிடப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் 1982இற்குப் பிறகு பங்கு மதிப்புகள் மும்மடங்கு உயர்வை பதிவு செய்தன. அதனால் பெரிய திருத்தத்தை சரிசெய்ய அன்று கறுப்புத் திங்கள் தினம் உருவானது.
இந்நிலையில் சுமார் 37 வருடங்கள் கழித்து மீண்டும் இன்று Black Monday நிகழும் என பிரபல பங்குச் சந்தை வல்லுநர் ஜிம் க்ராமர் (Jim Cramer) எச்சரித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து எக்ஸ் தளத்தில் Black Monday என்ற ஹஸ்டேக் டிரண்ட் ஆகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.