மிகவும் கடுமையான இரட்டை நிமோனியாவுக்கு எதிரான ஐந்து வாரப் போராட்டத்தில் இருந்து தப்பிய, பாப்பரசர் பிரான்சிஸ் நேற்றையதினம்(23) மருத்துவமனையில் இருந்து வத்திக்கானுக்குத் திரும்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இதன்படி அவர், 2025 பெப்ரவரி 14 ஆம் திகதிக்குப் பிறகு முதல் முறையாக பொதுவில் தோன்றியுள்ளார்.
88 வயதான போப், ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் இருந்து, நேற்று நண்பகல் வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து திரும்பியிருந்தாலும், அவரது வயதான உடல் முழுமையாக குணமடைய இன்னும் நிறைய காலம் எடுக்கும் என்று அவரது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், வத்திக்கானில் மேலும் இரண்டு மாதங்கள் ஓய்வெடுக்க அவர்கள் பரிந்துரைத்துள்ளனர், அத்துடன், பெரிய அல்லது மன அழுத்தமான கூட்டங்களைத் தவிர்க்குமாறு அவரிடம் கூறியுள்ளனர்.
இதனால் வரும் மாதங்களில் பிரான்சிஸ் எவ்வளவு செயல்பாடுகளை மேற்கொள்வார் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.