இந்த ஆண்டு தொடக்கத்தில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் சீனாவில் நான்கு கனேடியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கனேடிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவர்கள் அனைவரும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் என்றும், மேலும் அவர்களது குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில் அவர்களின் அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளன என்றும் கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி தெரிவித்துள்ளார்.
இந்தக் கொலைகளை “மீளமுடியாதவை மற்றும் அடிப்படை மனித உரிமைக்கு முரணானவை” என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சீனா இரட்டை குடியுரிமையை அங்கீகரிக்கவில்லை. மற்றும் போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்கிறது. பல மாதங்களாக வழக்குகளை மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும், முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட பிற அதிகாரிகளுடன் சேர்ந்து மரணதண்டனைகளை நிறுத்த முயற்சித்ததாகவும் ஜோலி கூறினார்.
கனடா இந்த நபர்களுக்கு மூத்த மட்டங்களில் கருணை காட்ட வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் எல்லா இடங்களிலும், மரண தண்டனையைப் பயன்படுத்துவதற்கு எதிராக கனடா உறுதியாக உள்ளது என ஜோலி கூறியுள்ளார்.
போதைப்பொருள், ஊழல் மற்றும் உளவு பார்த்தல் உள்ளிட்ட கடுமையான குற்றங்களுக்கு சீனா மரண தண்டனை விதிக்கிறது. மரணதண்டனைகளின் எண்ணிக்கை இரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், உலகிலேயே அதிக மரணதண்டனை விகிதங்களைக் கொண்ட நாடுகளில் சீனாவும் ஒன்று என்று மனித உரிமைகள் குழுக்கள் நம்புகின்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், கனடாவில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், கனேடிய குடிமக்களின் குற்றங்களுக்கான சான்றுகள் உறுதியானவை என்று கூறியதாகவும், கனடா பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட கனேடிய குடிமக்களின் உரிமைகள் மற்றும் நலன்களை சீனா முழுமையாக உத்தரவாதம் செய்துள்ளது என்றும், சீனாவின் நீதித்துறை இறையாண்மையை மதிக்க கனேடிய அரசாங்கத்தை வலியுறுத்தியது என்றும் சீனத் தூதரக செய்தித் தொடர்பாளர் மேலும் கூறியுள்ளார்.