சுகாதார நிபுணர்களின் இடம்பெயர்வு குறித்து, இலங்கையின் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, கவலையை வெளியிட்டுள்ளார்.
இது நாட்டின் சுகாதார அமைப்பு மற்றும் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார சபையில் உரையாற்றும் போது அவர் இந்த விடயங்களை முன்வைத்துள்ளார்.
2022 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்கு இடையில், ஆயிரக்கணக்கான சுகாதார நிபுணர்கள் இலங்கையை விட்டு வெளியேறி, நாட்டின் சுகாதார அமைப்புக்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
726 ஆலோசகர்கள், 1116 மருத்துவ அதிகாரிகள் மற்றும் 2800 செவிலியர் அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
இதன் காரணமாக, தமது சொந்த சுகாதார நிபுணர்களை உருவாக்க முதலீடு செய்த பின்னர், இலங்கை குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருப்பதாக நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், குறித்த சுகாதார நிபுணர்களை உள்வாங்கியுள்ள நாடுகளிடமிருந்து அதிக பொறுப்புக்கூரலை அமைச்சர் கோரியுள்ளார்.
அத்துடன், சர்வதேச சுகாதாரப் பணியாளர் ஆட்சேர்ப்பு குறித்த உலகளாவிய நடைமுறைக் குறியீட்டை, உலக சுகாதார நிறுவனம், திறம்பட செயற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.