கொழும்பு மாநகரசபைக்கு தெரிவான பல சுயாதீன குழு உறுப்பினர்களின் ஆதரவை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், நிர்வாகத்தை அமைக்கத் தேவையான 59 இடங்களைக் கொண்ட பெரும்பான்மையை விட குறைவாகவே, தேசிய மக்கள் சக்திக்கான உறுப்பினர் எண்ணிக்கை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2025 மே 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கொழும்பு மாநகரசபையின் 117 இடங்களில் தேசிய மக்கள் சக்தி 48 இடங்களில் வெற்றி பெற்றது இதன் மூலம் மாநகரசபையில் மிகப்பெரிய தனிக் கட்சியாக உருவெடுத்தது.
இந்த நிலையில், கொழும்பு மாநகர சபைக்காக போட்டியிட்ட ஐந்து குழுக்களின் 9 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, கொழும்பு மாநகர சபைக்காக போட்டியிட்டு இரண்டு ஆசனங்களை பெற்றுள்ள கே.டி.குருசுவாமி தலைமையிலான தமிழர் அணியை நேற்று சந்தித்துள்ளார்.
இதன்போது தமிழர் அணி, தமது ஆதரவை ஜனாதிபதியின் கட்சிக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இதனை தவிர ஏனைய 7 பேரும் ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்குகிறார்களா என்ற விடயம் இன்னும் தெரியவரவில்லை.
அத்துடன் 59 என்ற பெரும்பான்மையை பெற தேசிய மக்கள் சக்திக்கு வேறு எந்த கட்சிகள் ஆதரவளிக்கின்றன என்ற தகவலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஏனைய கட்சிகளை உள்ளடக்கிய ஒரு பரந்த கூட்டணியை உருவாக்கி மாநகர சபையின் நிர்வாகத்தை கைப்பற்ற முனைப்புக்காட்டி வருகிறது.
கொழும்பு மாநகர சபையில் இடப் பகிர்வை பொறுத்தவரையில், தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களை கொண்டிருக்கிறது. ஐக்கிய மக்கள் சக்தி 29 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 13 ஆசனங்களையும், பொதுஜன பெரமுன 5 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4 ஆசனங்களையும் கொண்டிருக்கின்றன.
சுயாதீனக்குழு 3 ஆசனங்களையும், சர்வஜன பலய 2 ஆசனங்களையும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பு 2 ஆசனங்களையும், சுயாதீனக்குழு ஐந்து, 2 ஆசனங்களையும், சுயாதீன குழு இரண்டு 2 ஆசனங்களையும், சுயாதீனக்குழு ஒன்று 2 ஆசனத்தையும், சுயாதீனக்குழு இரண்டு ஒரு ஆசனத்தையும், கொண்டிருக்கின்றன.
அதேநேரம் தேசிய சுதந்திர முன்னணி 1 இடத்தையும், ஏனைய ஐந்து அரசியல் கட்சிகள் தலா ஒவ்வொரு ஆசனங்களையும் கொண்டிருக்கின்றன.
இதன்படி பெரும்பான்மை வரம்பு 59ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இதேவேளை கொழும்பு மாநகரசபையின் ஆரம்ப அமர்வு ஜூன் 2ம் திகதி திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது 117 உறுப்பினர்களும் மாநகர முதல்வரை தேர்ந்தெடுக்க வாக்களிப்பார்கள்.