அரச ஊழியர்களின் சமீபத்திய சம்பள திருத்தத்திற்கு இணையாக தனியார் துறை ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச மாதாந்திர மற்றும் தினசரி சம்பளம் அதிகரிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் மற்றொரு நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதன்படி, தனியார் துறை ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச மாதாந்திர மற்றும் தினசரி சம்பளத்தை அதிகரிப்பதற்காக, 2005ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க தொழிலாளர் வரவு செலவு திட்ட நிவாரண கொடுப்பனவு சட்டம், 2016ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க தொழிலாளர் வரவு செலவு திட்ட நிவாரண கொடுப்பனவு சட்டம் மற்றும் 2016ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க தொழிலாளர் தேசிய குறைந்தபட்ச ஊதிய சட்டம் ஆகியவற்றின் திருத்தங்களை வர்த்தமானியில் வெளியிடும் முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
இந்த திருத்தங்களுக்கு ஏப்ரல் 7ஆம் திகதி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
குறித்த அனுமதியின் படி, மேற்படி சட்டங்களைத் திருத்துவதற்கான திருத்த மசோதாக்களை சட்ட வரைவாளர் தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சட்டமா அதிபரின் அனுமதிகளும் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, இந்த திருத்த மசோதாக்களை வர்த்தமானியில் வெளியிட்டு பின் அவற்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய தொழிலாளர் அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.