உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் அல்லது தேசிய பாதுகாப்பு தொடர்பில் முக்கிய தகவல்களை அறிந்திருந்தால் அவை தொடர்பில் புலனாய்வுப்பிரிவுக்கு அறிவிக்க வேண்டியது ஞானசார தேரரின் கடமையாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான முக்கிய தகவல்களை ஞானசார தேரர் ஊடகவியலாளர் மாநாடுகளில் கூறிக் கொண்டிருப்பது பொறுத்தமற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், புலனாய்வுத்துறையின் ஊடாக அரசாங்கம் மத அடிப்படைவாதத்தைப் பரப்பும் குழுக்கள் தொடர்பில் ஆராய்ந்து அது குறித்த தகவல்களை நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் வெளிப்படுத்தியது. உரிய நேரத்தில் அவ்வாறானவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் அல்லது தேசிய பாதுகாப்பு தொடர்பில் முக்கிய தகவல்களை அறிந்திருந்தால் அவை தொடர்பில் புலனாய்வுப்பிரிவுக்கு அறிவிக்க வேண்டியது ஞானசார தேரரின் கடமையாகும்.
விசாரணைகள் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படுபவையல்ல. அவை காவல்துறை மற்றும் புலனாய்வுப் பிரிவினாலேயே முன்னெடுக்கப்படும்.
ஞானசார தேரருக்கு புலனாய்வுப் பிரிவில் உள்ளவர்கள் யார் என்பது தெரியும். அந்த வகையில் தன்னிடமுள்ள தகவல்கள் தொடர்பில் அவரால் நேரடியாக புலனாய்வு பிரிவுக்கு தெரிவிக்க முடியும்.
அவ்வாறு வழங்கப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு புலனாய்வுப்பிரிவு விசாரணைகளை முன்னெடுக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.