பிரித்தானிய அரசாங்கம் இலங்கையின் மூன்று முன்னாள் இராணுவ தலைவர்களை உட்பட சில அதிகாரிகளை இலக்கு வைத்து தடைகளை விதித்தமைக்கு எதிராக, முன்னாள் கடற்படைத் தளபதி, வசந்த கரண்ணாகொட, கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானிய அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானியா தனது காலனித்துவ கொடூரங்களை ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் இந்தியாவில் இழைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கு இதுவரை மன்னிப்பு கோரவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், காசா, சிரியா, ஆப்கானிஸ்தான், மற்றும் லிபியாவில் நடக்கும் போர்கள் தொடர்பில் பிரித்தானியா குரல் கொடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் மனித உரிமை நிலைப்பாடு பற்றி மட்டும் பிரித்தானியா கரிசனை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மேற்கத்திய நாடுகளில் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மேற்கத்திய நாடுகளான பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இன்னும் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும், அந்நாடுகளின் அரசயில்வாதிகள் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதாகவும் கரண்ணாகொட குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை இராணுவத் தலைவர்களுக்கு எதிராக தடைகளை விதிக்கவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் இவர்களால் நிதி திரட்டப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர், ஒரு முன்னாள் மனித உரிமை சட்டத்தரணி எனவும், பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக்கொள்ள இவ்வாறான விடயங்களை பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கை அரசு தனது இராணுவத் தலைவர்களை ஆதரிக்க வேண்டும் எனவும் இவ்வகையான வெளிநாட்டுத் தடைகளை உறுதியாக எதிர்க்க வேண்டும் என்றும் கரண்ணாகொட வலியுறுத்தினார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.