பிற நாடுகளின் மீது வரி விதிக்கும் முடிவால் பாதிப்புதான் ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபையின் (United Nations) பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres) அமெரிக்காவுக்கு (United States) மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றது முதல் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
குறிப்பாக, சட்டவிரோத குடியேறிகளை தடுக்கத் தவறியதற்காகவும், போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்தாதற்கும், மெக்சிகோ மற்றும் கனடா மீது தலா 25 சதவீத வரிகளையும், சீனா மீது பத்து சதவீத வரியையும் விதித்தார்.
இதற்கு பதிலடியாக, அமெரிக்கா மீது 25 சதவீத வரிகளை கனடா விதித்ததுடன் அதேபோல, உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பும் நேற்று (12) முதல் நடைமுறைக்கு வந்தது.
ட்ரம்ப்பின் இந்த முடிவால், அதிகம் பாதிக்கப்படும் நாடுகளாக கனடாவும் (Canada) மற்றும் மெக்ஸிகோவும் (Mexico) உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரணம், அமெரிக்க இரும்பு இறக்குமதியில் கனடா 79 சதவீதமும், அமெரிக்க அலுமினிய இறக்குமதியில் மெக்சிகோவும்தான் அதிக பங்கு வகிக்கின்றன.
இந்தநிலையில், உலக நாடுகள் மீது வர்த்தகப் போரை தொடுத்தால், அனைத்தையும் இழக்க நேரிடும் என ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் உலகளாவிய பொருளாதாரத்தில் வாழ்ந்து வருகிறோம் என்று நினைக்கிறேன்.
ஏனெனில், ஒவ்வொன்றும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது அத்தோடு வரி இல்லாத வர்த்தகத்தின் மூலம், அனைத்து நாடுகளும் பயனடைய முடியும். வரிகளை சுமத்தி வர்த்தகப் போரில் ஈடுபட்டால், அனைத்தையும் இழக்க நேரிடும்” என அவர் தெரிவித்துள்ளார்.