யாழ்ப்பாணம்(Jaffna) தலைமை காவல் நிலைய பதில் பொறுப்பதிகாரிக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ். தலைமைப் காவல் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியின் மகன் ஒருவர் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ். தலைமை காவல் நிலைய பதில் பொறுப்பதிகாரியின் மகன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலஞ்சம் பெற்றதாக மாவட்ட காவல்துறை குற்றத்தடுப்பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு முறைப்பாட்டினை செய்தவருக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்னர் மது போதையில் வாகனம் செலுத்தி சென்ற போது யாழ்ப்பாணம் காவல்துறையினரால் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த வழக்கினை இல்லாது செய்வதற்காக யாழ்ப்பாணம் தலைமை காவல் நிலைய பதில் பொறுப்பதிகாரியின் மகன் 20 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றுள்ளார்.
இருப்பினும் குறித்த வழக்கு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், முறைப்பாட்டாளருக்கு 20 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில், தலைமை காவல் நிலைய பதில் பொறுப்பதிகாரியின் மகனுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்ட போதும் காவல்துறையினர் குறித்த விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை.
இந்த விடயமானது நேற்றையதினம்(07) மீண்டும் ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இதையடுத்து, குறித்த காவல்துறை அதிகாரிக்கு வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் திலக் தனபாலவினால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இன்று(08) முல்லைதீவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.