காசாவில் இஸ்ரேலிய தாக்குதலின் விளைவாக இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பலஸ்தீன சிறுவனின் உருவப்படம் இந்த ஆண்டின் World Press Photo 2025 ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கட்டாரை தளமாகக் கொண்டு இயங்கும் பலஸ்தீன புகைப்படக் கலைஞர் சமர் அபு எலூஃப், நியூயார்க் டைம்ஸ் இதழுக்காக எடுத்த இந்தப் புகைப்படத்தில், 9 வயது மஹ்மூத் அஜ்ஜோர் இரு தோள்பட்டைகளுக்கும் கீழ் கைகள் இன்றி இருப்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதில்141 நாடுகளைச் சேர்ந்த 3,778 புகைப்படக் கலைஞர்கள் சமர்ப்பித்த 59,320 உள்ளீடுகளில் இருந்து மதிப்புமிக்க புகைப்பட இதழியல் போட்டியின் 68வது பதிப்பின் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மஹ்மூத்தின் தாயார் எனக்கு விளக்கிய மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று மஹ்மூத் தனது கைகள் துண்டிக்கப்பட்டதை முதன்முதலில் உணர்ந்தபோது, அவன் அவளிடம் சொன்ன முதல் வாக்கியம், ‘நான் உன்னை எப்படி கட்டிப்பிடிக்க முடியும்?’ என்பதுதான்” என்று அபு எலூஃப் வேர்ல்ட் பிரஸ் ஃபோட்டோ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
“இது சத்தமாகப் பேசும் ஒரு அமைதியான புகைப்படம். இது ஒரு சிறுவனின் கதையைச் சொல்கிறது, ஆனால் தலைமுறைகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பரந்த போரின் கதையையும் சொல்கிறது,” என்று World Press Photo நிர்வாக இயக்குனர் ஜூமனா எல் ஜெய்ன் கௌரி கூறியுள்ளார்.
மார்ச் 2024 இல் இஸ்ரேலிய தாக்குதலில் இருந்து தப்பிச் செல்லும்போது நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் மஹ்மூத்தின் ஒரு கை துண்டிக்கப்பட்டதுடன் மறு கை சிதைந்தது என World Press Photo அமைப்பு அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.