உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் குறித்து அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), உதய கம்மன்பில மற்றும் நாமல் ராஜபக்ச ஏன் பதற்றமடைந்து பல கருத்துக்களை வெளியிடுகின்றார்கள் என்று எங்களுக்குத் தெரியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சியில் தற்போது இருக்கும் சில முன்னாள் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து ஏன் இவ்வளவு அக்கறை கொண்டுள்ளனர் என்று நாங்கள் சிந்திக்கின்றோம்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை. ரணில் விக்ரமசிங்க, உதய கம்மன்பில போன்ற முன்னாள் அமைச்சர்களும் நாமல் ராஜபக்ச உள்ளிட்டோரும் குழப்பமடைகின்றனர்.
அவர்கள் ஏன் பதற்றமடைந்து கருத்துக்களை வெளியிடுகின்றனர் என்று எங்களுக்குத் தெரியும்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு கடந்த ஐந்தரை வருடங்களாக அதற்கான விசாரணைகளை நசுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த நிலையில், நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்து பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்தோம்.
அந்தக் காலப்பகுதியில் எமது அரசாங்கத்திற்கு வாய்ப்புக் கிடைத்திருந்தால் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி உள்ளிட்டவர்களை கண்டுபிடித்து அம்பலப்படுத்தியிருப்போம்.
தற்போது குற்றப் புலனாய்வுத் துறையினர் இந்த விடயம் தொடர்பில் விரைவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.