இந்தியா – பாகிஸ்தான் போர்பதற்றத்தின் போது, பாகிஸ்தானுக்கு இராணுவ தளபாடங்கள் அனுப்பியதாக வெளியான செய்திகளுக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.
சீனாவிலிருந்து பாகிஸ்தானுக்கு இராணுவ தளபாடங்களுடன் சரக்கு விமானம் சென்றதாக வெளியான செய்தியை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது குறித்து சீன பாதுகாப்பு அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “சீன இராணுவம், தனது மிகப் பெரிய இராணுவ சரக்கு விமானத்தின் மூலம் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை எடுத்துச் சென்றதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
மக்கள் விடுதலை இராணுவ விமானப்படையின் சியான் Y-20 இராணுவ போக்குவரத்து விமானம் பாகிஸ்தானுக்கு இராணுவ தளபாடங்களை கொண்டு சென்றதாக கூறப்படும் செய்தியும் பொய்யானது” என்று சீன அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், “இத்தகைய ஆதாரமற்ற செய்திகளை பரப்புவது சட்டத்திற்குப் புறம்பானது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இணையம் சட்டத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது அல்ல. இராணுவம் தொடர்பான தவறான தகவல்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பரப்புபவர்கள் சட்டப்படி கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக, இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினைகளுக்குப் பிறகு பாகிஸ்தான் இராணுவ ரீதியாக பலவீனமடைந்துள்ளதாகவும், இதனால் அந்நாடு அவசரமாக இராணுவ தளபாடங்களை பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனா இராணுவ உதவிகளை வழங்க முன்வந்ததாகவும், அதன் காரணமாகவே இராணுவ தளபாடங்கள் அனுப்பப்பட்டதாகவும் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், சீனா இந்த செய்திகளை திட்டவட்டமாக மறுப்பதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.