முட்டாள்கள் தினத்தை கேக் வெட்டி கொண்டாடிய டேன் பிரியசாத்! சிஐடிக்கு அழைக்கப்பட்டது ஏன்..

0 6

அண்மையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட  டேன் பிரியசாத் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர் அல்ல. அவர் சிங்கள பௌத்தத்திற்காக குரல் கொடுத்த உண்மையான ஒரு சமூக செயற்பாட்டாளர் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சட்டத்தரணி மனோஜ் கமகே(Manoj Gamage) தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்லில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் மீதொட்டமுல்ல தொகுதியில் போட்டியிடவிருந்த வேட்பாளரான டேன் பிரியசாத் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சமூக செயற்பாட்டாளரான இவர் சிங்கள பௌத்தத்துத்துக்காகவே குரல் கொடுத்தார்.

ஏப்ரல் 1 ஆம் திகதி முட்டாள்கள் தினத்தன்று டேன் பிரியசாத் நாடாளுமன்றத்துக்கு முன்பாக கேக் வெட்டி இந்த அரசாங்கத்தின் பொய்களை சுட்டிக்காட்டினார்.

இதன் பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த விடயம் குறித்து டேன் பிரியசாத் என்னிடம் சட்ட ஆலோசனைகளை கோரியிருந்தார்.

அரசியல் ரீதியிலான விமர்சனங்களை முன்வைப்பதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு. விமர்சனங்களை முன்வைப்பதற்காக விசாரணைகளுக்கு அழைப்பதாயின் கடந்த காலங்களில் மக்கள் விடுதலை முன்னணியினர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் குடிகொண்டிருக்க வேண்டும். ஏனெனில் அந்த அளவுக்கு போலியான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தார்கள்.

டேன் பிரியசாத் சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டுள்ளார். அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் தற்போது இலக்கு வைக்கப்படுகிறார்கள். ஆகவே டேன் பிரியசாத்தின் மரணத்துக்கு இந்த அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும்.

டேன் பிரியசாத் பாதாள குழு உறுப்பினரோ அல்லது போதைப்பொருள் வியாபாரியோ கிடையாது. அவர் சிங்கள பௌத்தத்துக்காக குரல் கொடுத்த சமூக செயற்பாட்டாளர்.

ஆகவே இந்த மரணத்தை பாதாளக்குழுவின் கணக்கில் சேர்க்க முடியாது. அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்களை கொலை செய்து விட்டு அந்த பழியை பாதாள குழுக்கள் மீது சுமத்தும் போக்கு காணப்படுகிறது.

1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இவ்வாறான தன்மை காணப்பட்டது. எமது உயிருக்கும் அச்சுறுத்தல் காணப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.