2019 – ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து விசாரணை செய்ய நான்கு பேர் கொண்ட விசேட அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்கவின் கூற்றுப்படி, இந்தக் குழுவிற்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமை தாங்குகின்றார்.
குறித்த குழுவின் உறுப்பினர்களில் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) பொறுப்பான DIG, குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் (TID) தலைமை அதிகாரி ஆகியோர் அடங்குவர்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய புத்திக மனதுங்க, பிரதான குழுவின் கீழ் மேலும் பல துணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன, அவை ஏற்கனவே அறிக்கையை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளன என்றும் கூறினார்.
அத்துடன், 66,000இற்கும் அதிகமான பக்கங்களை கொண்ட அந்த அறிக்கையை தொடர்ந்து ஆய்வு செய்யும் போது கண்டறியப்படும் புதிய தகவல்களின் அடிப்படையில் புதிய விசாரணைகள் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
2019 – ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, மேலதிக விசாரணைக்காக நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில், ஜனாதிபதியின் செயலாளரால் இந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.