இலங்கையில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம்

0 3

கடந்த சில மாதங்களாக இலங்கை ரூபாய்க்கு எதிராக அமெரிக்க டொலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இதனால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் உயரும் போக்கும் ஏற்பட்டுள்ளது. அத்துடன், ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக வெளிநாட்டுக் கடன் அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி முதலாம் திகதி நிலவரத்திற்கமைய, ஒரு டொலரின் கொள்முதல் விலை 289 ரூபாயாகவும் டொரின் விற்பனை விலை 297ஆகவும் காணப்பட்டுள்ளது.

எனினும், நான்கு மாதங்களின் பின்னர் கடந்த 23 ஆம் திகதி, ஒரு டொலரின் கொள்முதல் விலை 295 ரூபாயாகவும், விற்பனை விலை 304 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

நான்கு மாதங்களில் ரூபாய் மதிப்பு சுமார் 5 ரூபாய் வரை குறைந்துள்ளது. இதன் பாதகமான தாக்கம் பெரும்பாலும் இலங்கை வெளிநாட்டுக் கடனில் உள்ளதென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியுடன், வெளிநாட்டுக் கடனின் அளவும் வேகமாக அதிகரித்து வருகிறது. இது இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் நெருக்கடிக்குள்ளாக்குகிறது.

தங்கம் உட்பட பல உலோகங்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் தற்போது சுமார் 35 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

தற்போதைய விகிதத்தில் டொலரின் மதிப்பு ஒரு ரூபாவினால் குறைந்தால், வெளிநாட்டுக் கடன் அளவு 35 பில்லியன் ரூபாய் அதிகரிக்கும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கடுமையான வரிக் கொள்கையைத் தளர்த்தாவிட்டால், இந்த நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.