சாணக்கியனின் உரையில் பொருத்தமற்ற வார்த்தைகள் : ஆளும் தரப்பு எதிர்ப்பு

0 0

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆற்றிய உரையில் சபைக்குப் பொருத்தமற்ற வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டுள்ளன என்றும், ஆகவே அது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆளும் தரப்பின் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பிரதி சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (09) நடைபெற்ற அமர்வின்போது இரா.சாணக்கியன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகள், மாகாண சபைத் தேர்தல், புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்து பிரதமரிடம் கேள்விகளை முன்வைத்தார்.

இதற்குப் பதிலளித்ததன் பின்னர் பிரதமர் ஹரிணி அமரசூரிய, “சக நாடாளுமன்ற உறுப்பினர் பயன்படுத்திய வார்த்தைப் பிரயோகம் மற்றும் மொழி நடை சபைக்குப் பொறுத்தமற்றவையாக உள்ளன.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்காதீர்கள்” என்று சபைக்குத் தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலியிடம் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “பிரதமரிடம் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நாடாளுமன்றத்துக்குப் பொருத்தமற்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். இதனைச் சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டு சென்று, முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளித்தால் நாடாளுமன்றத்தின் கௌரவம் மலினப்படுத்தப்படும். ஆகவே, இந்த விடயம் குறித்து அவதானம் செலுத்துங்கள்.” என்று சபைக்குத் தலைமை தாங்கிய பிரதி சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

இந்த விடயத்தைச் சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக சபைக்குத் தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.