தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் தேர்தல் பிரசாரக்களம் அங்கு சூடுபிடித்திருக்கின்றது.
இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (Vijay) பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர்களை கூறி நேரடியாக தாக்கி காரசாரமாக பேசியுள்ளார்.
நேற்று அரசியலில் நுழைந்தவர்கள் கூட முதலமைச்சர் ஆக வேண்டும் என கனவு காண்கிறார்கள் என்று சொல்கிறீர்களே? அப்படி என்றால், என் மீதும், என் கட்சியின் மீதும் மட்டும்? ஏன் அந்த அழுத்தம் என விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் “பெயரை மட்டும் வீரமாகச் சொல்லிவிட்டால் போதாது; ஆட்சியிலும் அதை நிரூபிக்க வேண்டும்.
எது அரசியல் ஒவ்வொரு குடும்பமும் சிறப்பாக வாழ வேண்டும் என நினைப்பதா? இல்லை ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டைச் சுரண்டி வாழ்வது அரசியலா?
ஒன்றியத்தில் உள்ள பாஜக ஆட்சி பாசிச ஆட்சி என்றால் நீங்கள் மட்டும் இங்கு செய்வது என்ன ஆட்சி? நீங்களும் அதையேதான் இங்கு செய்கிறீர்கள்.
என் தோழர்களையும் என் நாட்டு மக்களையும் சந்திப்பதை தடை போடுவதற்கு நீங்கள் யார் என வினவியுள்ளார்.
மேலும், மக்கள் சக்தியுடன் கூடிய மக்கள் ஆட்சியை உருவாக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
காற்றையும் மழையையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது, அதுபோலத்தான் தமிழக வெற்றிக் கழக ஆட்சியையும் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
நாங்கள் அமைக்கவிருக்கும் அரசு அதிகாரப் பகிர்வுடன் இயங்கும். ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை 100 வீதம் உறுதி செய்ய முடிவெடுக்கிறோம்.
குறிப்பாக, எமது ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு உறுதியானதாக இருக்கும்.
கல்வி, சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சமத்துவ வளர்ச்சி எங்கள் இலக்கு ஆகும்.
தமிழகம் விவசாய நிலம். விவசாயத்திற்கு எதிரான எந்தத் திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தின் நலனை பாதுகாக்க நாங்கள் எப்போதும் தயார் என ஆவேசமாக விஜய் பேசியுள்ளார்.