இரட்டை வேடம் போடுகின்றார் ஜனாதிபதி! தையிட்டி போராட்டக் களத்தில் கஜேந்திரன்

0 7

ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க ஒருபுறத்திலே தான் இனவாதம், மதவாதத்துக்கு இடமளிக்க மாட்டேன் என்று சொல்லிக்கொண்டு தமிழர் தேசத்தில் மேலும் மேலும் பௌத்த விரிவாக்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தையிட்டி திஸ்ஸ விகாரை வளாகத்துக்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் மற்றொரு கட்டடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நேற்று போராட்டத்தை முன்னெடுத்தது.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இன்று இராணுவத்தினரின் வாகனங்கள் ஆட்களை ஏற்றியிறக்கும் பணிகளில் அதிகளவில் ஈடுபட்டுள்ளன. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இந்தக் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டு தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர்கூட கொழும்பில் காணி உரிமையாளர்களை அமைச்சர் சந்தித்து, “இது உங்களுடைய காணிகள் என சொன்னால் விடுவிப்போம்” என்று ஒருபுறத்தில் கூறிக்கொண்டு, மறுபுறத்தில் அதே அரச இயந்திரம் சட்டவிரோத விகாரை வளாகத்துக்குள் அமைக்கப்பட்ட கட்டடத் திறப்பு விழாவுக்கு அரச வளங்களைப் பயன்படுத்திக் கொண்டிருப்பது என்பது அநுர அரசின் இரட்டை முகத்தைக் காட்டுகின்றது.

அநுர ஒருபுறத்திலே தான் இனவாதம், மதவாதத்துக்கு இடமளிக்கமாட்டேன் எனச் சொல்லிக்கொண்டு, தமிழர் தேசத்தில் மேலும் மேலும் பௌத்த விரிவாக்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார்.

அவரின் தலைமையில்தான் முன்னெடுக்கப்படுகின்றது” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.