யாழ்ப்பாணத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களது நிலைமையை காணொளியாக வெளியிட்டு புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் உறவுகளிடம் இருந்து பெறப்படுகின்ற பணத்தில் வறுமை கோட்டுக்கு உட்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாக காட்டும் வலையொளியாளர் (YouTuber) தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி (Rajeevan Jeyachandramoorthy) கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், வடக்கில் பெண்கள் மற்றும் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்கின்ற விடயம் அடிக்கடி செய்திகள் வாயிலாக வெளியாகின்றன.
நேற்று முன்தினம் (7) கூட ஒரு காணொளி வெளியாகி இருந்தது. அந்த காணொளியில் மக்களது வறுமையை காட்டி அதை வைத்து உழைப்பை பெறும் வகையில் யாழ்ப்பாண யூடியூப்பர் ஒருவரது அடாவடித்தனங்களை நாங்கள் கண்டு கொண்டோம்.
இது சம்பந்தமாக சமூக ஊடகங்களிலும் வலையத்தளங்களிலும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இவ்வாறான விடயங்கள் தமது மக்களை பல்வேறு விதத்திலும் பிரச்சினைகளுக்கு உள்ளாக்குகின்றன.
இந்த விடயம் தொடர்பாக நாங்கள் உடனடியாக மகளிர் விவகார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றோம்.
வெளிநாட்டில் வாழ்கின்றவர்களுக்கு இங்குள்ள மக்களின் பிரச்சினைகளை காண்பித்து அதன் மூலம் பணத்தை திரட்டி பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெண்கள், சிறுவர்கள் எமது நாட்டின் முதுகெலும்புகள் அவர்களை காக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது. அவர்களின் வறுமை என்ற கருவியை பயன்படுத்தி பல்வேறு தரப்பினரும் பணம் சுரண்டலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது பெண்களின் சிறப்பு உரிமைகளை மீறுகின்ற செயற்பாடாக அமைகிறது. இவ்வாறானவர்கள் சமூகத்திலிருந்து ஒழித்துக் கட்டப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டி இருக்கின்றது.
எனவே இவ்வாறான செயற்பாடுகளை ஈடுபடுகின்றவர்கள் தொடர்பாக உங்களுக்கு ஏதாவது தகவல் தெரிந்தால் உடனடியாக அதனை எனக்கு தெரியப்படுத்துங்கள்.
இந்த பிரச்சனைக்கு நாங்கள் பொலிஸார் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுடன் இணைந்து தீர்வு காண்பதற்கு முயற்சிக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.