அமெரிக்கா விரும்பும் எந்தவொரு போரிலும் பங்குகொள்ள தாம் தயாராக இருப்பதாக சீனா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிவிதிப்பு விடயங்களுக்கு பதில் வழங்கும் விதமாக குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதவியேற்றபின் முதல் முறையாக நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய ட்ரம்ப்,” அமெரிக்காவின் பொற் காலம் தொடங்கிவிட்டது. அமெரிக்கர்களின் கனவை நனவாக்க உழைத்து வருகிறோம்.
6 வாரங்களில் 100 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டேன். 400-க்கும் மேற்பட்ட நிர்வாக நடவடிக்கைகளை எடுத்து உள்ளேன். அமெரிக்கா மீது நியாயமற்ற வரிகள் விதிக்கப்படுகிறது.
அமெரிக்காவுக்கு மற்ற நாடுகள் பல தசாப்தங்களாக அதிக வரிகளைப் விதித்து வருகின்றன. தற்போது அந்த நாடுகளுக்கு எதிராக கூடுதல் வரி விதிக்கும் நேரம் இது.
ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் பிற நாடுகள் நாம் வசூலிப்பதை விட மிக அதிக கட்டணங்களை நம்மி டம் வசூலிக்கின்றன.
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக ஏப்ரல் 2ஆம் திகதி முதல் பரஸ்பர வரி விதிப்பு ஆரம்பமாகும் என ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இந்த கருத்துக்களுக்கு பதில் வழங்கியுள்ள அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம்,
“ஃபெண்டானில் விவகாரத்தில் அமெரிக்கா உண்மையிலேயே தீர்வு காண விரும்பினால், அதற்கு சரியான வழி, மற்றவரை சமமாக நடத்துவதன் மூலம் சீனாவுடன் ஆலோசனை நடத்துவதே.
ஒருவேளை அமெரிக்கா போரை விரும்பினால், அது வரி விதிப்பு போர், வர்த்தகப் போர் அல்லது வேறு எந்த வகையான போராக இருந்தாலும் சரி இறுதி வரை போராட நாங்கள் தயார்.
நாட்டின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்க சீனா எடுத்துள்ள நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானவை, அவசியமானவை.
பெண்டானில் விவகாரத்தைப் பொறுத்தவரை அமெரிக்காவைத் தவிர வேறு யாரும் அதற்கு பொறுப்பு இல்லை. அமெரிக்க மக்கள் மீதான மனிதாபிமானம் மற்றும் நல்லெண்ண உணர்வின் அடிப்படையில், அமெரிக்காவுடன் இணைந்து நாங்கள் வலுவான நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றார்.