சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது குறித்து அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்துவதாக அறிவித்துள்ளது.
அந்தவகையில் பொருட்களின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்வதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) மற்றும் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது முறையாகக் கூடி உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை தீர்மானங்களை எடுப்பது தொடர்பில் தீர்க்கமாக ஆராய்ந்துள்ளனர்.
அத்துடன் அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவு முறையை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் கொள்கையை வெற்றிகொள்வதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதை உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நெல் கொள்வனவு குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டதோடு நெல் கொள்வனவு செய்வதற்கு ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் கடன் வசதிகளின் கீழ் கொள்வனவு செய்யப்படும் நெல்லின் அளவைக் கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டின் பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதோச நிறுவனம் (Lanka Sathosa Company) அண்மையில் தெரிவித்திருந்தது.
இதன்படி வெள்ளை அரிசி மற்றும் நாட்டரிசி என்பவற்றின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.