சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவிடம் இருந்து நீரை மீண்டும் பெற்றுத்தர வேண்டும் என்று உலக வங்கியிடம், பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றத்தை அடுத்து, முன்னர் உலக வங்கியின் முன்னிலையில் செய்து கொள்ளப்பட்ட இந்த நீர் பங்கீட்டு உடன்படிக்கையை இந்தியா ஒருதலைப்பட்சமாக ரத்துச்செய்தது.
இதனையடுத்து, உலக வங்கி இந்த விடயத்தில் உடனடியாக தலையீட்டு இந்தியாவிடம் இருந்து தண்ணீரை பெற்று தர வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கையை விடுத்திருந்தது.
எனினும் உலக வங்கியின் தலைவரும், இந்தியா வம்சாவளியுமான அஜய் பங்கா இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். இந்த உடன்படிக்கையின்போது உலக வங்கி மத்தியஸ்தத்தையே வகித்தது.
எனவே இந்தியாவை இந்த விடயத்தில் வலியுறுத்தமுடியாது என்று அஜய் பங்கா குறிப்பிட்டுள்ளார். கடந்த 1960ம் ஆண்டு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்டன.
உலக வங்கியின் மத்தியஸ்தத்தில் நடந்த இந்த ஒப்பந்தத்தின்படி, சிந்து ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளின் நீரை இருநாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவின் கிழக்கு பகுதி ஆறுகளுக்கு 30வீத நீரும்,பாகிஸ்தானின் மேற்கு பகுதி ஆறுகளுக்கு 70 வீத நீரும் ஒதுக்கப்பட்டன.
எனினும் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. இது பாகிஸ்தானுக்கு பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது.
சிந்து நதிநீர் என்பது பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கியமானதாகும்.அந்த நாட்டின் 22 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த சிந்து நதிநீரை நம்பியே வாழ்கின்றனர்.