காஸ்மீர் பஹல்காம் தாக்குதல் விடயத்தில், இலங்கை நடுநிலையான, அணிசேரா பங்கை வகிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் எதிர்பார்ப்பதாக கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இராஜதந்திர தரப்பை கோடிட்டு இந்த செயதியை குறித்த ஊடகம் வெளியிட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலை அடுத்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசிய பின்னர், ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையின் அம்சங்களை பாகிஸ்தான் அதிகாரிகள் கவனத்தில் கொண்டுள்ளனர்.
இந்தநிலையில், 2025 மார்ச் 11, அன்று பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், பயணிகள் தொடருந்தை பலுச் பிரிவினைவாதிகள் கடத்திய சம்பவம் தொடர்பில், இலங்கை ஜனாதிபதி தமது நடுநிலைமையைக் காட்டாதது ஏன் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் கவலை கொண்டுள்ளதாகவும் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தான் எந்த வடிவத்திலும் பயங்கரவாதத்தை மன்னிக்கவில்லை என்று வலியுறுத்தியுள்ள குறித்த இராஜதந்திர தரப்பு, பஹல்காமில் என்ன நடந்தது என்பது குறித்து சர்வதேச விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
சிந்து நதி நீரை அதன் விவசாயத்திற்காக நிறுத்தி வைத்தால் பாகிஸ்தான் இராணுவ ரீதியாக பதிலளிக்கும் என்று தரப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்திய-பாகிஸ்தான் விடயத்தில் தமது நாடு நடுநிலையாக செயற்படும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.