சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல இன்று (25) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சந்தேக நபரை மிரிஹான சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெல்லம்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் வைத்து சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் மீது கடந்த (22) ஆம் திகதி இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதனையடுத்து, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேவேளை, டேன் பிரியசாத் படுகொலையில் தந்தையும் மகனும் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்கள் இருவருக்கும் வெளிநாடு செல்ல தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.