விடுதலைப் புலிகளை காரணம் காட்டி தப்பிக்க பார்க்கும் பிள்ளையான்! கதறி அழுதும் மறுக்கப்பட்ட இரகசிய சந்திப்பு

0 4

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க உதவிய தன்னை இந்த அரசாங்கம் தண்டிப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கதறி அழுதார் என சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிள்ளையானை சந்தித்தது தொடர்பில் இன்று (16) அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் மூளையாக பிள்ளையான் இருப்பதாக யாராவது சொன்னால் அது ஒரு நகைச்சுவை. ஏப்ரல் 10 ஆம் திகதி பொது பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விவரங்களை பிள்ளையான் வெளிப்படுத்தியதாகக் கூறினார்.

ஏப்ரல் 12 ஆம் திகதி, மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டதாக ஜனாதிபதி கூறினார்.

இருப்பினும், ஏப்ரல் 13 ஆம் திகதி நான் பிள்ளையானைச் சந்தித்தபோது, ​​அரசாங்கம் கூறுவது போல், தாக்குதல்கள் குறித்து இந்த நபர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னும் பின்னும் பிள்ளையான் தடுப்புக் காவலில் இருந்ததால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து அவருக்குத் தெரிந்திருக்க வழி இல்லை என்பது தெளிவாகிறது” என உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, “கடந்த ஏப்ரல் 09ஆம் திகதி அன்று பிள்ளையானைச் சந்திக்க முயன்றபோது, ​​குற்றப் புலனாய்வுத் துறை (CID) பிள்ளையானை அணுக அனுமதி மறுத்ததாக அவரது நண்பரான பிள்ளையானின் வழக்கறிஞர் தனக்குத் தெரிவித்ததாக உதய கம்மன்பில கூறினார்.

இதன் பிறகு, நான் பிள்ளையானின் குடும்பத்தினரைச் சந்தித்து தேவையான விவரங்களைப் பெற்றேன். பின்னர் நான் சிஐடியின் இயக்குநர் ஜெனரலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, பிள்ளையானின் குடும்பத்தினரும் வழக்கறிஞர்களும் அவரை அணுக மறுக்கப்பட்டுள்ளதாகவும், இது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (பி.டி.ஏ) மீறல் என்றும் தெரிவித்தேன்.

நான் இப்போது பிள்ளையானின் வழக்கறிஞராக இருப்பதால், அவரைச் சந்திக்க வேண்டியிருப்பதால், எனக்கு அனுமதி வழங்கப்படுமா என்று வினவினேன்.

எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுக்குமாறு சிஐடி இயக்குநர் ஜெனரலால் தெரிவிக்கப்பட்டு, அவ்வாறு செய்யப்பட்டதை அடுத்து, பிள்ளையானைச் சந்திக்க எனக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இருப்பினும், எங்கள் சந்திப்பின் போது நான்கு பொலிஸ் அதிகாரிகள் உடனிருந்தனர், இது இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இது வழக்கமான நடைமுறை அல்ல. ஒரு வழக்கறிஞருக்கும் அவரது காவலில் உள்ள வாடிக்கையாளருக்கும் இடையிலான சந்திப்பு இரகசியமாக இருக்க வேண்டும்.

ஆனால், எங்களை தனியாக விட்டுவிடுமாறு பொலிஸ் அதிகாரிகளிடம் கோரிய போதிலும், அவர்கள் கோரிக்கையை நிராகரித்து எங்கள் சந்திப்பின் போது உடனிருந்தனர்” என்று உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த சந்திப்பின் போது பிள்ளையான், உயிரைப் பணயம் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க உதவியதற்காக தனக்கு தண்டனை விதிக்கப்படுகிறதா என்றும், இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் தடுத்து வைக்கப்படப் போகிறார் என்றும் கேள்வி எழுப்பி, கண்ணீர் விட்டு அழுததாகவும் உதய கம்மன்பில கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.