அரசாங்கம் மருத்துவர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் சேவையிலான சவால்களை தீர்க்கத் தவறினால் தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகலாம் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நேற்று எச்சரித்துள்ளது.
அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் சந்திப்பு நடத்தியதாகவும், ஆனால் எந்த உடன்படிக்கையும் எட்டப்படவில்லை எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சாமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி குறித்த பிரச்சினைகளை விரிவாக ஆய்வு செய்ய மேலும் கால அவகாசம் வேண்டுமென என குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கைகள் எடுப்பது என்பது இறுதி கட்ட முயற்சியாக மட்டுமே இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வாரம் மீண்டும் ஜனாதிபதியையும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவையும் சந்திக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மருத்துவ துறைசார் அதிகாரிகள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு குடிப்பெயர்வது மற்றும் நிபுணர்கள் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மருத்துவர்களின் கொடுப்பனைகள் மற்றும் விடுப்பு முறையில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், “மாலை 4 மணிக்குப் பிறகு பணியாற்ற முடியாத சூழ்நிலை உருவாகினால் இலங்கையில் சுகாதார சேவையை தொடர்ந்து வழங்க முடியாது” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சம்பள உயர்வு வழங்கப்பட்டாலும் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டதால் சம்பள அதிகரிப்பின் பலன்கள் கிடைக்கப் பெறாது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.