பாகிஸ்தானுக்கு எதிரான ஒப்பரேசன் சிந்தூர் மற்றும் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுமாறு, இந்திய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரியுள்ளார்.
பாகிஸ்தானுடன் மத்திய அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்த ஒரு நாளுக்குப் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முதலில் போர் நிறுத்தத்தை அறிவித்ததை, ராகுல் காந்தி இந்த கடிதத்தில் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.
ஒப்பரேசன் சிந்தூர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முதலில் அறிவித்த போர் நிறுத்தம் குறித்து மக்களும் அவர்களது பிரதிநிதிகளும் விவாதிப்பது மிகவும் முக்கியம்.
அத்துடன், இது எதிர்வரும் சவால்களைச் சந்திப்பதற்கான, கூட்டுத் தீர்மானத்தை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகவும் இருக்கும். எனவே இந்தக் கோரிக்கையை தீவிரமாகவும் விரைவாகவும் பரிசீலிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இரு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவித்தார். இதனையடுத்து, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ. போர் நிறுத்தத்தை அறிவித்தார்.
அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கள் வெளியாகி, அரை மணி நேரத்திற்குப் பின்னரே வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இரண்டு தரப்பினருக்கும் இடையில் போர் நிறுத்தம் மாலை 5 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் செரீப் உட்பட பாகிஸ்தான் தலைவர்கள் சமூக ஊடகங்களில் போர்நிறுத்தத்தை அறிவித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு நன்றி தெரிவித்தனர்.
குறிப்பிடத்தக்க வகையில், இந்தியத் தலைமையின் எந்த அதிகாரப்பூர்வ பதில்களும், இந்தப் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கை முன்னிலைப்படுத்தவில்லை.