ஹமாஸை (Hamas) அழிப்பது பிணைக்கைதிகளை மீட்பதுதான் இஸ்ரேலின் இலக்கு என இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் (Israel), காசா (Gaza) இடையிலான போர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. காசா ஆதரவு தெரிவித்து வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஏமனில் இருந்து இஸ்ரேலை தாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், இஸ்ரேலின் முக்கிய நகரான டெல் அவிவ் (Tel Aviv-Yafo) பென்குரியன் சர்வதேச விமான நிலையம் அருகே, நேற்று (04.05.2025) ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
இந்த விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது, போர் தொடங்கிய பிறகு நடத்தப்பட்ட முதல் தாக்குதல் ஆகும்.
இதில் உயிரிழப்புகள் இல்லை என்றாலும், சிலர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) வெளியிட்ட காணொளியில், “நாங்கள் கடந்த காலத்தில் அவர்களுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டோம். எதிர்காலத்திலும் செயல்படுவோம்.
இனி 1 முறை தாக்குதல் நடத்திவிட்டு ஓயமாட்டோம், தொடர் தாக்குதல் நடத்துவோம். நாங்கள் 2 பணிகளில் கவனம் செலுத்துகிறோம்.
ஒன்று ஹமாஸை அழிப்பது, மற்றொன்று அவர்களிடம் இருந்து பிணைக்கைதிகளை பத்திரமாக மீட்பதுதான். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.
ஹவுதி அமைப்பினர் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என தெரிவித்துள்ளனர்.