இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு அநுராதபுரம் நகர எல்லைக்குள் உள்ள அனைத்து தெருநாய்களையும் அகற்ற அநுராதபுரம் ஆளுநர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.
விலங்கு மக்கள் தொகை முகாமைக்கான கால்நடை மருத்துவர்கள் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் முதல் வாரத்தில் நரேந்திர மோடி மூன்று நாட்கள் அதிகாரப்பூர்வ பயணமாக இலங்கைக்கு வருகை தர உள்ளார்.
இதன்போது, ஜெய ஸ்ரீ மகா போதிக்கு மரியாதை செலுத்தவும், இலங்கை தொடருந்து துறையின் கீழ் இந்திய அரசு நிதியுதவி செய்யும் திட்டங்களின் தொடக்க விழாவில் பங்கேற்கவும் அவர் அநுராதபுரம் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை முன்னிட்டே தெரு நாய்களை அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அநுராதபுரத்தில் நகராட்சி மன்றத்தின் ஆதரவுடன் ஐந்து வருட செயல்பாட்டுத் திட்டம் தற்போது நடைபெற்று வருவதாகவும், 90 சதவீதத்திற்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அநுராதபுரம் நகர எல்லைக்குள் உள்ள அனைத்து தெருநாய்களையும் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.