ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கங்கள் வீழ்ச்சியடைந்தமைக்கான காரணம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) புதிய காரணமொன்றைக் கண்டுபிடித்துள்ளார்.
தம்புள்ளை முன்னாள் நகராதிபதி ஜாலிய ஓபாத வீட்டில் நேற்று (01) நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் குறித்த காரணத்தை வெளியிட்டுள்ளார்.
அங்கு உரையாற்றிய நாமல் ராஜபக்ச தொழிற்சங்கத்தினர், வர்த்தக சமூகம், சிவில் சமூக அமைப்புகள், இளம் தலைமுறையினர் ஆகியோரின் கருத்துக்களைச் செவிமடுக்காத காரணத்தினாலேயே நாங்கள் உருவாக்கிய அரசாங்கங்கள் வீழ்ச்சியடைந்தது.
எனவே தற்போதைய அரசாங்கத்தின் தலைவரும், அமைச்சர்களும் நாட்டு மக்களின் கருத்துக்களை செவிமடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததில் இருந்து எல்லாத் தவறுகளுக்கும் எங்கள் மீதே குறை கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.
தற்போதைக்கு ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கும் நாங்கள் தான் காரணம் என்று கூறப் போகின்றார்களோ தெரியாது என்றும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.