பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கூட்டமைப்பின் கல்வியாளர்களுக்கும் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடலின் போது, கல்வியாளர்கள் தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான சாத்தியமான தீர்வுகள் குறித்து, சந்திப்பின் போது ஆராயப்பட்டுள்ளன.
இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது, இது, பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் அளவுருக்களை, இலங்கை அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என்று கோருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் வருமானம் மற்றும் செலவின வரம்புகளை மையமாகக் கொண்டு, கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளன.
நிதி வரம்புகள் இருந்தபோதிலும், அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அதிகரிப்பை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது என்பது, இந்த சந்திப்பின் போது, அரச தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.