இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் சுற்றுலாப் பயணிகளால் 400.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்ட தரவுகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் கிடைத்த பதிவுசெய்யப்பட்ட 341.8 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்துடன் ஒப்பிடுகையில் இது 17.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அத்துடன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 362.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சுற்றுலா வருமானமாக கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளால் 3,168.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மொத்த வருமானமாக கிடைத்துள்ளது என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது 2023 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 2,068.0 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானத்துடன் ஒப்பிடும் போது 53.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை மொத்தமாக 232,341 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.
மேலும், இவ்வருடத்தில் பெப்ரவரி 27ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தமாக 485,102 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.