கணேமுல்ல சஞ்சீவ கொலையின் திட்டமிடலில் மேலும் ஒரு இலங்கையர் : நீண்டு செல்லும் விசாரணை

0 3

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் திட்டமிடலில்,  இலங்கையில் வசிக்கும் மற்றொரு நபர், செயற்பட்டிருக்கலாம் என்று  இலங்கை பொலிஸை கோடிட்டு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சட்டத்தரணி போல் வேடமிட்டு நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்த பெண்ணையும் இந்த நபரே வழிநடத்தியிருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

படுகொலை நடந்தபோது நீதிமன்ற வளாகத்தில் இருந்த அடையாளம் காணப்பட்ட சிறப்புப் படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் மொத்தம் 13 கைப்பேசிகள் விசாரணைக் குழுக்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த தொலைபேசிகள் தற்போது மேலதிக விசாரணைக்காக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடந்த மாதம் 19 ஆம் திகதி கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்தில் முன்னிலையானமை குறித்தும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு தப்பிச் செல்ல சந்தேக நபர் பயன்படுத்திய வான், மேலதிக விசாரணைக்காக அரச ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, வானின் இயந்திர எண், சேசிஸ் எண் மற்றும் உரிமத் தகடுகள் போலியானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

வானின் உரிமையாளர் என்று நம்பப்படும் ஒரு பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

வானை அவருக்கு வழங்கியவர், மற்றொரு பொலிஸ் அதிகாரி என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த அதிகாரி தற்போது துபாயில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரமுகரின் பாதுகாப்பில் உள்ளார்.

இதேவேளை, கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய பெண் சந்தேக நபரின் தாயார் மற்றும் தம்பி மார்ச் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் முந்தைய தடுப்புக்காவல் உத்தரவு காலாவதியானதைத் தொடர்ந்து, அவர்கள் நேற்று கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேகர முன் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்த சந்தேக நபர்கள் சம்பவம் குறித்து அறிந்திருந்தனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.