கொழும்பு துறைமுக நகரத்திற்கு சென்று தற்போதைய அரசாங்கம் கட்டுமானபணி ஒன்றுக்கான அடிக்கல்லை நாட்டிவைத்ததன் மூலம் அவர்களது கொள்கையில் இருந்து மாறியுள்ளமை வெளிப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சு மீதான வரவு செலவு திட்ட விவாதம் இன்று நாடளுமன்றில் இடம்பெற்ற போது, அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
”சர்வதேச முதலீடுகளுக்கும், கொழும்பு துறைமுக நகரத்துக்கும் இடையே சிறந்த வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
இன்று இலங்கையின் சுற்றுலாத்துறையில் மறுமலர்ச்சி காணப்படுகின்றது. இதனை எதிர்காலத்திலும் சிறந்த முறையில் கொண்டு செல்ல வேண்டும் என்றால் சிறந்த திட்டங்களை வகுக்க வேண்டும்.
கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்தியின் இரண்டாவது கட்டம் தொடர்பில், நல்லாட்சி காலப்பகுதியில் ஊழல்கள் பற்றிய விசாரணைகள் இடம்பெற்றன.
தற்போதைய அரசாங்கமும் அது தொடர்பில் குற்றங்களை எழுப்பியிருந்தன.
ஆனாலும் பத்து – பதினைந்து வருடங்கள் கடந்தாலும், ஆமைவேகத்திலேனும் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
100 மில்லியன் பயணிகளுக்கு சேவை வழங்கும் இடமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை மாற்றி அமைக்கவேண்டும்.
இது சுற்றுலாப் பயணிகளை 20 சதவீதம் முன்னேற்றுகின்ற முறைாயக காணப்படுகிறது.
20 சதவீதத்துக்கும் அதிகமான வருவாய் தரக்கூடிய வகையில் சுற்றுலாத்துறையை மாற்றவேண்டும் என்றால் 50 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் சேவையை முன்னெடுக்கவேண்டும்.
கட்டுநாயக்கவின் இரண்டாம் கட்டம் வந்தாலும், மத்தளை, யாழ்ப்பாணம் போன்ற விமான நிலையங்களுக்கு பயணிகள் சேவையை மையப்படுத்தினால் பயணிகள் சேவை முலம் வருவாயை அதிகரித்துக்கொள்ளலாம்.
இதன்மூலம் நாட்டின் விமான நிலையங்களை சாதாரமாக 80 சதவீதத்துக்கும் அதிகமான பயணிகள் சேவையை வழங்குகின்ற இடமாக மாற்றியமைக்களாம்” என்றார்.
Comments are closed.