இலங்கையில் பாடசாலை செல்லும் சிறுமிகள் கர்ப்பமடைவது தொடர்பாக வெளிவரும் தகவல்கள் காரணமாக அதிகாரிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சமூக வலைத்தள பாவனை அதிகரிப்பின் பின்னர் இலங்கையில் சிறுவயதுக் கர்ப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் பிரகாரம் கடந்த 2023ஆம் ஆண்டு 163 பாடசாலை மாணவிகள் கர்ப்பம் அடைந்திருந்த நிலையில், 2024ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கையானது 213 வரை அதிகரித்துள்ளது.
பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் மீதான அத்துமீறல் விசாரணை பிரிவின் தரவுகள் இதனைத் தெரிவிக்கின்றன.
2024ஆம் ஆண்டு பதிவான குழந்தைத் தாய்மார்களுக்கு மத்தியில், 10 வயதான சிறுமி ஒருவரும் உள்ளடங்கியிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
அதிகாரப்பூர்வமாக பதிவாகியுள்ள குழந்தைத் தாய்மார்களை விடவும், அதிக எண்ணிக்கையிலான குழந்தைத் தாய்மார்கள் இலங்கையில் இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகின்றது.
நாட்டில் தற்போது பதிவாகின்ற சில சம்பவங்களில், கர்ப்பத்திற்குப் பொறுப்பு கூற வேண்டிய ஆண்கள், 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் எனவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக சிறுவர் அத்துமீறல் சம்பவங்கள் அதிகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு வௌியிட்டுள்ள புள்ளிவிபரம் ஒன்றில் இந்தத் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சிறுவர் அத்துமீறல் அதிகம் இடம்பெற்ற பிரதேசங்களாக வாகரை,மண்முனை வடக்கு மற்றும் கிரான் போன்ற பிரதேசங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.