தற்போதைய கழிவு கொடுப்பனவு நடைமுறையின் கீழ் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்கு பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் இணங்கியுள்ளதாக எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ச (Kumar Rajapaksa) தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதிய கழிவு கொடுப்பனவு சூத்திரத்தில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்வதற்குப் பரிந்துரை முன்வைக்கப்படுமாயின் அது தொடர்பாக ஆராயப்படும் என்று பெட்ரோலியக் கூட்டுத்தாபன தலைவர் குறிப்பிட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும், இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் (04) நடைபெற்றது.
கனியவள கூட்டுத்தாபன தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டார்.
இதேவேளை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) முன்வைத்த புதிய விலை நிர்ணய சூத்திரத்திற்கு எரிபொருள் விநியோகஸ்தர்கள் உடன்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்திருந்தார்.
மேலும் விநியோகஸ்தர்கள் சமர்ப்பித்த திட்டங்களை மறுஆய்வு செய்ய மார்ச் 18 ஆம் திகதி மற்றொரு கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.